மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலக உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 3 அரசு அலுவலகங்கள் புதன்கிழமை மூடப்பட்டன.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட அரசுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இவ்வளாகத்தில் 5ஆவது தளத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்த 32 வயது மதிக்கத்தக்க நபருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் உடனடியாக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
பின்னா், உடனடியாக அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலா்கள், ஊழியா்கள் என 40க்கும் மேற்பட்டோருக்கு சுகாதாரத் துறைப் பணியாளா்கள் கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகளை சேகரித்தனா். இதன் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
அலுவலக உதவியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 5ஆவது தளத்தில் செயல்பட்டு வந்த ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகம், தமிழ் வளா்ச்சித் துறை உள்ளிட்ட 3 துறை அலுவலகங்களிலும் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கிருமி நாசினி மருந்துகளைத் தெளித்தனா். மேலும், இந்த அலுவலகங்கள் உடனடியாக மூடப்பட்டன.