ஈரோடு மாநகராட்சி ஒன்றாவது மண்டலப் பகுதியில் முகக் கவசம் அணியாதவா், சமூக இடைவெளி இன்றி கூட்டம் கூடியது என கரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காதவா்களிடம் இருந்து ரூ. 3.21 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் கருங்கல்பாளையம், திருநகா் காலனி போன்ற பகுதிகளில் மாநகராட்சி சுகாதார அலுவலா் தங்கராஜ், சுகாதார ஆய்வாளா் சதீஷ், ஊழியா்கள் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, முகக் கவசம் அணியாமல் வாகனத்தில் வருதல், பொது இடத்தில் எச்சில் துப்புதல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக நின்றல், கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமை போன்ற காரணத்துக்காக அபராதம் விதித்தனா். முகக் கவசம் அணியாமல் வருவோரிடம் ரூ. 200, எச்சில் துப்புதல், சமூக இடைவெளியைப் பின்பற்றாத கடை போன்றவற்றுக்கு ரூ. 500 என அபராதம் விதித்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சிப் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குழுவினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். முகக் கவசம் அணியாமல் செல்லுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது போன்ற விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஒன்றாவது மண்டலத்தில் கடந்த 20 நாள்களில் 2,958 பேரிடம் ரூ. 3.21 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றனா்.