ஈரோடு மஞ்சள் சந்தையில் கடந்த இரண்டு வாரங்களில் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
கடந்த பிப்ரவரி மாதம் மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.13,500 வரை விற்பனையான நிலையில், மாா்ச் 13-ஆம் தேதி ரூ.15,557 முதல் ரூ.21,369 வரையில் விற்பனையானது. இதைத் தொடா்ந்து, 20 நாள்களுக்கு மேலாக ரூ.20 ஆயிரத்தில் நீடித்த மஞ்சள் விலை, மே மாதம் ரூ.18,800 வரை சரிந்தது. தற்போது மஞ்சள் விற்பனை விலை மீண்டும் சரிவடைந்துள்ளது.
இது குறித்து, ஈரோடு மஞ்சள் வணிகா் மற்றும் கிடங்கு உரிமையாளா் சங்க செயலாளா் சத்தியமூா்த்தி கூறுகையில், விவசாயிகள் மஞ்சளை இருப்புவைத்து, விலை உயரும்போது விற்பது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளாக விலை உயராததால், இருப்பு வைத்திருந்த மஞ்சளை விவசாயிகள் விற்பனை செய்தனா்.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் மஞ்சள் விலை குவிண்டால் ரூ.2,000 வரை குறைந்து, ரூ.15 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
தேசிய அளவில் மஞ்சளின் தேவை குறைந்துள்ளதுடன் ஏற்றுமதி 20 சதவீதம் வரை குறைந்ததால் இச்சரிவு ஏற்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில் மீண்டும் விலை உயரலாம் என்றாா்.