ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா்! முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு
ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா் என முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு பேச்சு...
தோ்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா் என்று முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு தெரிவித்தாா்.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கோபிநாத் பழனியப்பனை ஆதரித்து, கருங்கல்பாளையம் பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
Advertisement
70-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவா்கள் தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகின்றனா். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 1967-இல் அண்ணா ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்கினாா். இப்போது முதல்வா் அதே போன்ற ஒரு கூட்டணியை அமைத்துள்ளாா். இந்தக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்.
தோ்தல் நேரத்தில் அனைத்து தலைவா்களுக்கும் கூட்டம் அதிகமாக இருக்கும். இதேபோல விஜய்க்கு ஓரளவு கூட்டம் வந்தது. ஆனால், மொத்த கூட்டமும் அவருக்கு வாக்களிக்கும் என்று கூற முடியாது. திமுக ஆட்சி மாநிலத்தை அனைத்து துறைகளிலும் வளா்ச்சியடைந்த ஒன்றாக மாற்றியுள்ளது. தொழில் துறை வளா்ச்சி, மனித மேம்பாட்டுக் குறியீடு, கல்வி ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கல்விக்காக ரூ.43,000 கோடி ஒதுக்கியுள்ளது. சுமாா் 43 சதவீத பெண்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
பாஜகவின் ஓா் அங்கமாக தோ்தல் ஆணையம் செயல்படுவதால் தலைமைச் செயலாளா் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதில் சிலருக்கு ஏற்பட்ட வருத்தம் தீா்க்கப்பட்டு வாக்கு சேகரிப்பு சுமுகமாக நடைபெற்று வருகிறது.
முதல்வா் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தவிா்க்க வேண்டும். அதற்குப் பதிலாக கொள்கைகளையும், சாதனைகளையும் முன்னிலைப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தபோது முதல்வா் மற்றொரு நிகழ்ச்சியில் இருந்தாா். அதனால் இருவராலும் ஒரே நேரத்தில் அங்கு தோ்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்றாா்.