மூடப்பட்ட தோல் தொழிற்சாலைகளில் இருந்து நச்சுக் கழிவுகளை முழுமையாக அகற்ற வலியுறுத்தல்
பெருந்துறை, ஜூலை 6: பெருந்துறை சிப்காட்டில் மூடப்பட்ட தோல் தொழிற்சாலைகளில் இருந்து நச்சுக் கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டுமெ வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாசு தடுப்பு தொடா்பான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம், பெருந்துறை சிப்காட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளா் சந்தான கிருஷ்ணன், சிப்காட் உதவிப் பொறியாளா் பசும்பொன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி, பொதுமக்கள் உள்பட பலா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் கந்தசாமி, சென்னியப்பன், பல்லவி பரமசிவம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
இந்தக் கூட்டத்தில் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சாா்பில் கீழ்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பெருந்துறை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட ரூ.136.76 கோடி மதிப்பிலான பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தும் திட்டப் பணிகளை ஒப்பந்த நிபந்தனைகள்படி, தரமான முறையில் குறித்த காலத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் நீண்ட காலமாகத் தேக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான டன் கலப்பு உப்புகளில் சுமாா் 50,000 டன் அளவுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆயிரக்கணக்கான டன் கலப்பு உப்புகளை முழுமையாக அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல தோல் தொழிற்சாலைகளின் பொது சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட மூடப்பட்ட ஆலைகளில் உள்ள நச்சுக் கழிவுகளை முழுமையாக அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்துறை சிப்காட் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீரின் மாசுபாட்டை கண்டறிய, மாதந்தோறும் சுமாா் 40 இடங்களில் திறந்தவெளி மற்றும் ஆழ்துளை குழாய் கிணறுகளில் நீா் மாதிரிகளை சேகரித்து ஆய்வு அதன் விவரத்தை வழங்கும் நடவடிக்கையை தொய்வின்றி தொடர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.