நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் மாலையில் தொடங்கி இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்வது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த மழையாக இல்லாவிட்டாலும், சராசரியாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயப் பணிகள் தீவிரமடைந்திருப்பது மட்டுமின்றி குடிநீர் ஆதாரங்களும் ஊற்றெடுக்கத் தொடங்கியுள்ளன. மாவட்டத்தில் குறிப்பாக உதகை உள்ளிட்ட பகுதிகளில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்துதான் மழைப் பொழிவே தொடங்கியுள்ளதால் ஆடி மாதம் முடிவடைவதற்குள் மாவட்டத்தில் குறிப்பிட்ட மழைப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை நேரங்களில் தொடங்கும் மழை நள்ளிரவு வரை நீடிப்பதால் விவசாயப் பணிகளும், இதரப் பணிகளும் பகல் நேரங்களில் இடையூறின்றி நடைபெற்று வருகின்றன. இந்த மழை, மலைக் காய்கறிகளுக்கு மட்டுமின்றி, தேயிலைப் பயிருக்கும் ஏற்றதாகவே அமைந்துள்ளது. ஆனால், இரவு நேரங்களில் மட்டுமே மழை பெய்வதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போரும், சரிவான பகுதிகளில் வசிப்போரும் இரவு நேரங்களை அச்சத்துடனேயே கழித்து வருகின்றனர். பரவலான மழை மற்றும் தொடர் மேகமூட்டத்தின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் வெயில் இன்றி குளிரான காலநிலையே நிலவி வருகிறது.
மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக எமரால்டில் 38 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்):
கேத்தி-22, பர்லியாறு-19, உதகை-18.4, கோத்தகிரி மற்றும் கூடலூர் தலா-17, நடுவட்டம்-16, குந்தா-15, குன்னூர்-13, கொடநாடு-12, அவலாஞ்சி மற்றும் அப்பர்பவானி தலா 9, கிளன்மார்கன்-8, கெத்தை-2, கல்லட்டி-1.