கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை தனியார் எஸ்டேட்டில் பெண் தொழிலாளியை தாக்கிய கரடியை பிடிக்க கூண்டு அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தில் தேவர்சோலை பகுதியில் உள்ள மேபீல் பகுதியில் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளியை கரடி தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். கடந்த ஆண்டும் இதேபோல் தனியார் எஸ்டேடில் ஒரு பெண் தொழிலாளியை கரடி தாக்கியது.
அதைத் தொடர்ந்து பெண் தொழிலாளர்கள் வேலைசெய்யும் இடத்தில் ஆண் தொழிலாளர்களை காவலுக்கு அனுப்பி வைத்தது எஸ்டேட் நிர்வாகம். காலப்போக்கில் காவலுக்குச் சென்ற ஆண் தொழிலாளர்களை நிர்வாகம் நிறுத்திவிட்டது.
இந்நிலையில் பெண் தொழிலாளியை கரடி தாக்கிய சம்பவத்தால் மற்ற பெண் தொழிலாளர்கள் தற்போது பீதியில் உள்ளனர்.
இந்நிலையில் அந்தக் கரடியைப் பிடிக்க வனத் துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.