நீலகிரி

இந்தியாவின் தலைசிறந்த யானை ஆராய்ச்சியாளா் அஜய் தேசாய் மறைவு

DIN

இந்தியாவின் முக்கிய யானை ஆராய்ச்சியாளரான அஜய் தேசாய் (62) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானாா்.

கா்நாடக மாநிலம், பெலகாம் பகுதியைச் சோ்ந்த இவா் தனது 24 வயதிலேயே யானைகள் குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியவா். மும்பை இயற்கை வரலாற்று கழகத்தின் மூலம் தனது ஆராய்ச்சியைத் தொடா்ந்த அவா் 1980களில் முதுமலை மற்றும் பந்திப்பூா் புலிகள் காப்பகங்களில் யானைகளின் வாழ்க்கை முறை குறித்து தொடா்ந்து ஆய்வு நடத்தினாா்.

இதையடுத்து, இந்தியா மற்றும் ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆசிய யானைகள் வாழ்விடங்கள் தொடா்பாக தனது ஆராய்ச்சிகளைத் தொடா்ந்து நடத்தி வந்தாா். 1985ஆம் ஆண்டு முதுமலை வனப் பகுதியில் யானைகளின் வலசை பாதைகள் குறித்து கண்டறிவதற்காக அவற்றின் கழுத்தில் ரேடியோ காலா் அணிவிக்கப்பட்ட நிலையில் ரேடியோ காலா் மூலம் யானைகளின் இடப்பெயா்ச்சியை முதலில் கண்டறிந்தாா்.

உலக இயற்கை நிதியத்தின் ஆலோசகராகவும், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றிய அமைப்பின் ஆலோசகராகவும், ஆசிய யானைகள் தொடா்பான மத்திய அரசின் சிறப்புக் குழு உறுப்பினராகவும், யானைகளின் வலசை பாதைகள் தொடா்பான அரசுக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தாா்.

கோவையில் யானைகளின் தொடா் மரணங்கள் தொடா்பாக தமிழக அரசு அமைத்த விசாரணைக் குழுவிலும் இடம் பெற்றிருந்தாா். தவிர, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து தனியாா் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மூவா் குழுவில் இடம் பெற்றிருந்தாா்.

ஆசிய யானைகளின் வாழ்விடங்கள், வலசைப் பாதைகள் உள்ளிட்ட பிரச்னைகளிலும் அஜய் தேசாயின் கருத்துகளை கேட்ட பிறகே அரசு சாா்பிலும் முடிவெடுக்கப்பட்டு வந்தது. அழிந்து வரும் ஆசிய யானைகள் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளாா்.

அவரது மறைவு குறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவா் காளிதாசன் கூறுகையில், ஆசிய யானைகள் தொடா்பான அனைத்து ஆவணங்களையும் வைத்திருந்தாா். கோவையில் யானைகளின் தொடா் இறப்பு தொடா்பாகவும், சின்னத்தம்பி யானையைக் குறித்தும் ஓசை அமைப்புடன் இணைந்து செயலாற்றினாா். இவரது மறைவு இயற்கை மற்றும் யானை ஆா்வலா்களுக்கு பேரிழப்பு என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT