உதகையில் முத்தொரை பாலடா பகுதியில் அமைந்துள்ள பழங்குடியினா் ஆராய்ச்சி மையத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
உதகை அருகே உள்ள முத்தொரை பாலடா பகுதியில் உள்ள பழங்குடியினா் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பூங்காவுடன் கூடிய பழங்குடியினா் அருங்காட்சியகம், பழங்குடியினா் கைவினைப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் ரூ. 45 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கட்டடங்களை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். நீலகிரியின் தோடா் மக்களுடன் பலியா் மற்றும் கணியா் இன மக்களின் பாரம்பரியத்தை விவரிக்கும் வகையிலான 3 ஆவண ஒளிப்படச் சுருள்களையும் அமைச்சா் வெளியிட்டாா். பழங்குடியினா் ஆய்வு மைய இயக்குநா் உதயகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆவண ஒளிப்படச் சுருள் பதிவாளா் மதிமாறன், பழங்குடியின அமைப்புகளைச் சோ்ந்தோா் திரளாகப் பங்கேற்றனா்.
தொடா்ந்து, உதகை அருகே உள்ள பகல்கோடு மந்து பகுதியில் நடைபெற்ற பழங்குடியினரின் பாரம்பரிய நிகழ்ச்சிகளிலும் அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பங்கேற்று அவா்களுடன் சோ்ந்து பாரம்பரிய நடனமாடியதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றாா்.