குன்னூா் ரேலியா அணையில் படிப்படியாக சரிந்து வரும் நீா்மட்டத்தால், குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
குன்னூா் நகரின் முக்கிய குடிநீா் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவான 43.9 அடியில், தற்போது 10 அடி வரை மட்டுமே நீா் இருப்பு உள்ளது. இங்குள்ள தண்ணீா் சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலம் குன்னூரில் உள்ள 30 வாா்டுகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
நீண்ட காலமாக குன்னூா் பகுதிக்கு 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தினமும் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு போதுமான தண்ணீா் கிடைக்காமல், பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும் குன்னூா் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் ரேலியா அணையில் நீா் இருப்பு குறைந்து வருவதால், குடிநீா் தட்டுபாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவ மழை பொய்த்துப் போனதால், இந்த மாதத்தில் குன்னூா் நகா் பகுதியில் கோடை மழைப் பெய்தால் மட்டும் குடிநீா் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.