அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றிக் கிடைக்க அரசுத் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.
லாரிகள் பொது வேலை நிறுத்தத்தையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:
டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
உழவர் சந்தை அலுவலர்கள் விவசாயிகளுடன் பேசி காய்கறிகளை உழவர் சந்தைக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். அத்தியாவசியப் பொருள்களின் விலையினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்துக்கு மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வரும் வெங்காயத்தை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவர வேளாண் வணிகத் துறை ஏற்பாடு செய்யவேண்டும்.
வேளாண் துணை இயக்குநர், தன் வசம் உள்ள அரசுத் துறை வாகனங்கள் மூலமாக நீலகிரியிலிருந்து மலைக் காய்கறிகளைத் தங்குடையின்றி திருப்பூர் மாவட்டத்திற்குக் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள், கூடுதல் வாகனம் தேவைப்படின் உடனடியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலரைத் தொடர்பு கொண்டு விவசாயிகள் காய்கறிகளை சிரமமின்றிக் கொண்டுவர பேருந்து ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருள்கள் வரத்து மற்றும் விநியோகத்திற்குக் கொண்டு செல்லுதல் ஆகிய பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் உறுதிப்படுத்த வேண்டும்.
எரிபொருள்கள், காய்கறிகள் உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் எவ்விதத் தங்குதடையும் இன்றி பொதுமக்களுக்குக் கிடைக்க அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, அனைத்துத் துறை அலுவலர்கள்கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.