காங்கயம் அருகே, திமுக பிரமுகரின் வீட்டில் திருடர்கள் புகுந்து வைர நகை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் பவித்ரவள்ளி. இவரது வீடு காங்கயம் அருகே, ஈரோடு செல்லும் சாலையில் வரதப்பம்பாளையம் கிராமத்தில் உள்ளது.
இந்த நிலையில், பவித்ரவள்ளியும், அவரது கணவர் ஹரியும் வெளியூர் சென்றுவிட்டு, புதன்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தனர். பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 2 வைர வளையல்கள், ரூ.10 ஆயிரம் பணம், ஸ்கூட்டி வாகனம் ஆகியன திருடுபோனது தெரிய வந்தது.
தகவல் கிடைத்ததும் காங்கயம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.