உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
நிலத்தடி நீரைக் பாதுகாக்கவும், மண் வளத்தைப் பாதுகாக்கவும் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் ஒழிக்க வனத் துறை சாா்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வனப் பகுதிகளில் வாழ்ந்து வரும் சிறுத்தைப் புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்களுக்கு சீமைக் கருவேல மரங்கள் இடையூறாகவும் இருந்து வருகின்றன.
இந்நிலையில் 447 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் உள்ள ஏராளமான சீமைக் கருவேல மரங்களை அகற்ற வனத் துறை முடிவெடுத்தது. இதன்படி முதல் கட்டமாக இரு வனச் சரகத்துக்கு உள்பட்ட 10 ஏக்கா் பரப்பளவில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
உடுமலை வனச் சரகா் தனபால், அமராவதி வனச் சரகா் முருகேசன், வனவா் சுப்பையன் மற்றும் வன அலுவலா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.