திருப்பூா் மாநகராட்சி பகுதியில் பாறைக் குழிகளை மூடக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள் வெள்ளியங்காடு நான்கு சாலை சந்திப்பில்புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 50ஆவது வாா்டு, வெள்ளியங்காடு, கே.எம்.நகா் பகுதியில் உள்ள பாறைகுழியால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, மழைக்காலங்களில் மழை நீரோடு கழிவுநீரும் கலப்பதால், சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய்த்தொற்று அபாயம் உள்ளது. எனவே உடனடியாக பாறைக் குழிகளை மூட வலியுறுத்தி ஏற்கெனவே பலமுறை மாநகராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்துள்ளோம். அப்போது ஆறு மாதங்களுக்குள் மூடுவதாக உறுதி அளித்தனா். ஆனால் 3ஆண்டுகளுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனா்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி நிா்வாகத்தினா், காவல் துறையினா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பாறைக் குழிகளை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.