காங்கயம்: காங்கயம் அருகே மின்னல் தாக்கியதில் மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த 15 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், பாப்பினி ஊராட்சி, உத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60). விவசாயியான இவர் 35-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை காலை மேய்ச்சலுக்காக தனது தோட்டத்தில் விட்டு இருந்தார். இப்பகுதியில் மதியம் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.
மழை நின்ற பின் தோட்டத்துக்கு சென்று ஆடுகளை பார்த்த சுப்பிரமணி அதிர்சி அடைந்தார். அங்கு மேய்ந்து கொண்டிருந்த 15 செம்மறி ஆடுகள் மின்னல் தாக்கி உயிரிழந்தது தெரிய வந்தது..
தகவல் அறிந்த காங்கயம் வட்டாட்சியர் விசாரணை நடத்தினர். கால்நடை மருத்துவ குழுவினர் ஆடுகளின் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்தனர். இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என விவசாயி தரப்பில் தெரிவித்தனர். இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.