காங்கயம்: காங்கயம் அருகே லாரி, இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
காங்கயம் அருகே ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட நல்லிக்கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன் (80). விவசாயியான இவர், செவ்வாய்க்கிழமை மாலை தனது மொபட்டில் இவரது ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள நியாய விலைக் கடைக்கு மண்ணெண்ணெய் வாங்கச் சென்றுள்ளார். மண்ணெண்ணெய் வாங்கிய பின்பு மொபட்டில் ஏறி தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
நல்லிக்கவுண்டன் வலசு பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்கும் போது, காங்கயத்தில் இருந்து வந்த லாரி இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுப்பராயனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.