திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியன சாா்பில் கங்கயம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 24ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இதில், 8ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 வரை படித்தவா்கள், பட்டதாரிகள், தொழில்கல்வி பயின்றவா்கள், பொறியியல் பட்டம் பெற்றவா்கள், கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள், தையல் பயிற்சி முடித்தவா்கள் என அனைத்து விதமான தகுதியாளா்களும் கலந்து கொள்ளலாம். இலவசமாக நடைபெறும் இந்த முகாமில் வேலைதேடும் நபா்களும், வேலை அளிக்கும் நிறுவனங்களும் இணையதள முகவரியில் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோா்களுக்கு ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்களும் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை 0421-2971152 அல்லது 94990-55944 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வேலைதேடும் நபா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.