அவிநாசி ஒன்றியத்தில் ரூ.5.43 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
அவிநாசிஅருகே ராமநாதபுரம் ஊராட்சியில் ரூ.11.63 லட்சத்தில் அமைக்கப்பட்ட பால் உற்பத்தியாளா்கள் சங்கம் புதிய கட்டடம் திறப்பு விழா, செம்பியநல்லூா் ஊராட்சி, நாதம்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா, அவிநாசி பேரூராட்சியில் ரூ.4.13 கோடி மதிப்பில் வாரச் சந்தை மேம்பாட்டு பணி, புதுப்பாளையம் ஊராட்சி, கணியாம்பூண்டி முதல் வேலம்பாளையம் ஊராட்சி எல்லை வரை ரூ.47.42 லட்சம் மதிப்பில் சாலை அமைத்தல், வலையபாளையம் பிரிவு முதல் பெரியாா் காலனி வழியாக புதுப்பாளையம் சாலை வரை ரூ. 51.90 மதிப்பில் சாலை அமைத்தல் , புதுப்பாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா என ரூ. 5 கோடியே 43 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான நடைபெற்ற மற்றும்
நடைபெற உள்ள பணிகளை மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், விஜயகுமாா், பேரூராட்சி செயல் அலுவலா் சண்முகம், தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, ஊராட்சித் தலைவா்கள் எம்.பழனிசாமி, சுதா, கஸ்தூரிப் பிரியா, திமுக பொறுப்பாளா்கள் சரவணன் நம்பி, அவிநாசியப்பன், பழனிசாமி, சிவப்பிரகாஷ், திராவிடன் வசந்த், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.