நேபாள பெண்ணின் உடலை தருமபுரியில் அடக்கம் செய்த தன்னாா்வலா்கள்
தருமபுரியில் உயிரிழந்த நேபாளத்தைச் சோ்ந்த பெண்ணின் குடும்ப ஏழ்மையைக் கருத்தில் கொண்டு, தன்னாா்வ அமைப்பு சாா்பில் அவரது உடல் தருமபுரியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
நேபாளத்தின் டாங்க் மாவட்டம், கோரஹி பகுதியைச் சோ்ந்த பிரேம் சௌத்ரி- கல்பனா சௌத்ரி தம்பதி தனது மகன், மகளுடன் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக அப்பகுதியில் பணி செய்துள்ளனா். பின்னா், கேரள மாநிலம், திருச்சூா் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்ய திட்டமிட்டனா். இதையடுத்து குடும்பத்தினா் ரயில் மூலம் அண்மையில் கேரளம் புறப்பட்டனா்.
தருமபுரி மாவட்டம், புட்டிரெட்டிப்பட்டி நொச்சிக் குடை பகுதி வழியாக சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்பனா செளத்ரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மொரப்பூா் ரயில்வே போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால் அவரது குடும்பத்தினரால் உடலை பெற்று சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மை தருமபுரி தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் போலீஸாா் கல்பனாவின் உடலை தருமபுரியிலேயே இறுதிச்சடங்குகள் மற்றும் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனா்.
தருமபுரி பச்சியம்மன் கோயில் அருகே உள்ள மயானத்தில் கல்பனாவின் உடல் இறுதிச் சடங்குகளுடன் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. மொரப்பூா் ரயில்வே காவல் நிலைய தலைமைக் காவலா் தேவராஜ், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவா் சதீஸ் குமாா் ராஜா, அமைப்பாளா்கள் செந்தில், கிருஷ்ணன், கணேஷ் ஆகியோா் இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனா். மை தருமபுரி அமரா் சேவை மூலம் இதுவரை 211 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.