தருமபுரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அச் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஜெ. பிரதாபன் புதன்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கை:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மழை மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, அணைகள், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன. மேலும், தருமபுரி மாவட்ட மக்கள் குடிநீருக்காக பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆகவே, மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் குடிநீர் பற்றாக்குறையின்றி கிடைக்கவும் அதேபோல, கால்நடைகளுக்கும் போதிய தண்ணீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிகமாக ஒகேனக்கல் குடிநீரை கூடுதலாக வழங்க தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாக எடுக்க வேண்டும் என்றார்.