வனப் பகுதிகளில் விதைகளை தூவும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவேரிப்பட்டணம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் 50 ஆயிரம் விதைப் பந்துகளை சனிக்கிழமை தயாரித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை மேம்படுத்தவும், வன விலங்களுகள் வனத்திலிருந்து வெளியேறி விவசாய நிலங்களைச் சேதப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் கிருஷ்ணகிரியில் உணர்வுகள் என்ற அமைப்பினர் வனப் பகுதிகளில் விதைபந்துகளை வீசியும், பனை போன்ற மரங்களின் விதைகளை நடவு செய்து வருகின்றனர்.
இந்த சேவையின் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 1 லட்சம் இலக்காக கொண்டு விதைப் பந்துகளைத் தயாரிக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.
மாவட்ட வன அலுவலர் கே.வரதராஜன் தொடங்கிவைத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.புகழேந்தி, கிருஷ்ணகிரி கோட்ட இடைபாடு காடுகளின் வனச்சரக அலுவலர் கே.குமார், காவேரிப்பட்டணம் ரோட்டரி சங்கத் தலைவர் ஜி.வெங்கட்ரமணன், பசுமைப்படை ஒன்றியச் செயலாளர் பி.பவன்ராஜ், ஒருங்கிணைப்பாளர் டி.வாசகி, மாநகரம், கிரின் அன்ட் கிரின், உணர்வுகள் ஆகிய அமைப்பினர் மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரி மாணவிகள் உடனிருந்தனர்.
இயற்கை உரம், வளமிக்க மண், விதை ஆகியவற்றைக் கொண்டு விதைப் பந்து தயாரிக்கும் பணியில் மாணவர்கள் உற்சாகமாக ஈடுபட்டனர். வேப்பம், நெல்லி, புளி, பூவரசு, பாதாம் ஆகியவற்றின் விதைகளைக் கொண்டு 50 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன.
விரைவில் வனத் துறையினர் உதவியுடன் இந்தப் பந்துகள் வனப் பகுதியில் வீசப்பட உள்ளதாக உணர்வுகள் அமைப்பினர் தெரிவித்தனர்.