சூளகிரி அருகே தனியார் பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர்.
ஒசூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணகிரி நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பயணித்த திம்மராஜ் மனைவி கவிதா (28) அட்டகுறுக்கி பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த கவிதா நிகழ்விடத்திலே உயிரிழந்தார்.
இதையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் பேருந்தின் முன்புறக் கண்ணாடியை உடைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த சூளகிரி போலீஸார் கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சூளகிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.