மாசு இல்லா பொங்கலை கொண்டாட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல்நாள் போகிப் பண்டிகையை கொண்டாடுகிறோம். இந்த நாளில் பழையன கழிதல் என்ற மொழிக்கு ஏற்ப கிழிந்த பாய், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாயக் கழிவுகள் ஆகியவற்றை தீயிடுவது கிராமங்களில் வழக்கம்.
ஆனால், மக்கள் நெருக்கம் மிகுந்த நகரப் பகுதிகளில் டயர், ரப்பர், பிளாஸ்டிக், செயற்கைப் பொருள்கள் ஆகியவற்றை தீயிட்டு எரிக்கின்றனர். இதனால், சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு கண் எரிச்சல், சுவாச நோய்கள், இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சுகாதார பாதிப்பும், சாலையில் போக்குவரத்து தடையும் ஏற்படுகிறது.
இதுபோன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாகும். மேலும், நீதிமன்றமானது பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, போகிப் பண்டிகையை மாசு இல்லாமல் கொண்டாடுவோம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.