பயன்பாட்டுக்கு வராத அரசுப் பள்ளிக் கட்டடம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோயில் கிராமத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோயில் கிராமத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட அரசு பள்ளிக் கட்டடம் நிகழாண்டில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திர மாநில எல்லையில் உள்ளது காளிக்கோயில் கிராமம். இந்தக் கிராமத்தில் செயல்பட்டு வந்த நடுநிலைப் பள்ளியானது கடந்த 2011-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
தரம் உயர்த்தப்பட்ட இப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், அங்குள்ள தொடக்கப் பள்ளி வளாகத்தில் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.
2017- 2018-ஆம் ஆண்டு கல்வியாண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடக்கப் பள்ளி வளாகத்தில் பயின்று வருகின்றனர். தொடக்கப் பள்ளி வளாகத்தில் உயர்நிலைப் பள்ளி செயல்படுவதால், தொடக்கப் பள்ளி மாணவர்களும் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
இத்தகைய நிலையில், தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிக்குக் கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின்கீழ் இரண்டு அடுக்கு கட்டடம் ரூ.140.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. சாய்வுத் தளம் வசதிகளுடன் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை 2017-ஏப்ரல் முதல் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். ஆனால், அந்தக் கட்டடம் இதுவரையில் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை கட்டடம் திறக்கப்படவில்லை.
மாணவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு செயல்படாத பள்ளிக் கட்டடத்தை விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.
கிராம விவசாயிகள் ஸ்ரீனிவாசன், ஜி.அம்மாசி ஆகியோர் தெரிவித்தது
காளிக்கோயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் இரண்டு கி.மீ. தூரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிக்குக் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், பள்ளிக்குச் செல்லும் மண் சாலையானது செங்குத்தாக உள்ளது.
இந்தச் செங்குத்தான மண் சாலையில் வாகனங்கள், மிதிவண்டிகள் செல்ல இயலாத நிலை உள்ளது. இதனால், கட்டிமுடிக்கப்பட்ட இந்த பள்ளிக் கட்டடம், பயன்பாட்டுக்குக் கொண்டுவர இயலவில்லை எனக் கூறுகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கி.மீ. தூரம் உள்ள இந்தச் செங்குத்தான மண் சாலையை சிமென்ட் சாலையாக மேம்படுத்துவதன் மூலம், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் எளிதில் பள்ளிக்குச் சென்று வர இயலும் என்றனர்.