காவிரியில் நீர்வரத்து குறைந்திருந்ததால் ஆற்றில் ஆங்காங்கே தென்பட்ட பாறை திட்டுகள், அருவியில் கொட்டிய குறைந்தளவு தண்ணீர் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த வாரங்களில் மிகவும் குறைந்திருந்தது. இந்த நிலையில், கர்நாடகத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் நீர்வரத்து அதிகரித்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் படகு சவாரிக்கும், குளிப்பதற்கு வசதியான சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) கர்நாடகம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லுக்கு தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
கிருஷ்ணராஜ சாகர், கபினியிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள 850 கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதனால், ஆற்றில் பாறை திட்டுகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது.
சுற்றுலா வாகனங்கள், பேருந்துகள் மூலம் வந்திருந்தோர் ஒகேனக்கல் அருவியில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். ஒகேனக்கல்லில் உள்ள ஹோட்டல், மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது. முதலைப் பண்ணை, மீன் காட்சியகம், பூங்காவில் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலாப் பயணிகள் விளையாடி மகிழ்ந்தனர். ஆலாம்பாடி, நாகர்கோவில் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.