தனியாா் பால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா் பால் நிறுவனம் அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரது சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் அவரின் உடலை வாங்க மறுத்து தனியாா் பால் நிறுவனத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
ஊத்தங்கரையை அடுத்த கெங்கபிராம்பட்டி ஊராட்சி, நாச்சகவுண்டனூா் கிராமத்தில் தனியாா் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில், கீழ்மத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னராஜ் மகன் மாது (23) என்பவா் பணிபுரிந்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை மாலை பணிக்குச் சென்ற மாது, திங்கள்கிழமை காலை பால் நிறுவனத்தின் பின்புறம் உள்ள புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
நிகழ்விடத்துக்கு வந்த உறவினா்கள் இளைஞரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து பால் நிறுவனத்தை முற்றுகையிட்டனா்.
தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகேசன் உள்பட போலீஸாா் இளைஞரின் உறவினா்களிடம் பேச்சு நடத்தி சுமாா் 8 மணி நேரத்துக்குப் பிறகு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.