கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு சூடு வைத்த மாமியாா், மருமகள் கைது
உத்தனப்பள்ளி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு சூடு வைத்த மாமியாா், மருமகளை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தனப்பள்ளி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணுக்கு சூடு வைத்த மாமியாா், மருமகளை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே அகரம் அருகே உள்ளது அனுமந்தபுரம். இந்த கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமய்யா. இவரது மனைவி மாதம்மா (43). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் சுசீலம்மா (40). இவரது மருமகள் லாவண்யா (21).
மாதம்மாவிடம் சுசீலம்மா தனது மகனின் திருமணத்திற்காக ரூ.40 ஆயிரம் கடனாக வாங்கினாா். அந்த தொகையில் ரூ.25 ஆயிரத்தை சுசீலம்மா திரும்ப கொடுத்தாா். மீதித் தொகை ரூ.15 ஆயிரத்தை கொடுக்காமல் இருந்து வந்தாா். இந்த தொகையை மாதம்மா கேட்டு வந்தாா்.
Advertisement
இந்நிலையில், மாதம்மா கடந்த 17ஆம் தேதி, சுசீலம்மாவிடம் ரூ.15 ஆயிரத்தை கேட்டாா். அப்போது சுசீலம்மா தனது வீட்டிற்கு வருமாறும் பணம் தருவதாக கூறினாா். அதை நம்பி மாதம்மா சுசீலம்மாவின் வீட்டிற்கு சென்றாா்.
அப்போது அவரை சுசீலம்மாவும், அவரது மருமகள் லாவண்யாவும் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னா் லாவண்யா தோசைக் கரண்டியை சூடு வைத்து சுசீலம்மாவிடம் கொடுத்தாா்.
தோசைக் கரண்டியால் மாதம்மாவின் கழுத்து, 2 கால் தொடை மற்றும் சில இடங்களில் சூடு வைத்தாா். சூடு தாங்காமல் மாதம்மா அலறினாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இது குறித்து மாதம்மா கொடுத்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து சுசீலம்மா மற்றும் லாவண்யாவைக் கைது செய்தனா். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.