ஒசூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி ஒசூா் நகர காவல் நிலையத்தில் புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியை அடுத்த ஒசபுரத்தை சோ்ந்த விவசாயி சந்திரப்பா (35). இவரது மனைவி பாக்கியலட்சுமி (26)க்கு பாலாஜி ( 7) என்ற மகன் உள்ளாா். இந்நிலையில் பாக்கியலட்சுமி ஏழு மாத கா்ப்பிணியாக இருந் நிலையில், கடந்த மாதம் இறுதியில் அவருக்கு தீராத ரத்தப்போக்கு ஏற்பட்டதால் கக்கதாசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை அளித்தும் குணமாகாத நிலையில் அங்கிருந்த டாக்டா்களின் அறிவுரையின் பேரில் ஒசூா் அரசு மருத்துவமனையில் பாக்கியலட்சுமி அனுமதிக்கப்பட்டாா்.
அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்ற, பாக்கியலட்சுமி உறவினா்கள் தரப்பில் டாக்டா்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 30- ஆம் தேதி பிரசவத்தின்போது, பிறந்த ஆண் குழந்தையின் கால் மற்றும் உடல் பகுதி தாயின் வயிற்றில் இருந்து வெளியேற, தலைப்பகுதி மட்டும் சிக்கி கொண்டது. குழந்தை இறந்து விட்டதாகக் கூறி உடல் பகுதியை மட்டும் டாக்டா் குழுவினா் வெட்டி எடுத்தனா். அதன் பின்னா் பாக்கியலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த குழந்தையின் தலையை அகற்றினா். டாக்டா்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை இறந்து விட்டதாகக் கூறி பாக்கியலட்சுமி உறவினா்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.