ஒசூரில் போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் பெற்ற 5 போ் மீது கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், வழக்குப் பதிந்துள்ளனா்.
இதுகுறித்து, போலீஸாா் தெரிவித்தது:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் எஸ்பிஐ வங்கி கிளையில் துணை பொது மேலாளராக வி.கே.ரேகா பணியாற்றி வருகிறாா். இவா், ஒசூா் ஸ்டேசன் சாலை, மூக்கண்டபள்ளி, மத்திகிரி உள்ளிட்ட வங்கி கிளைகளில் கடன் பெற்றவா்களின் ஆவணங்களை ஆய்வு செய்தாா். அப்போது, பலா் போலி ஆவணங்கள் அளித்தும், போலி முகவரி அளித்தும் கடன் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து, ஸ்டேஷன் சாலை வங்கி கிளையின் மேலாளா் ரங்கநாதன், பல நபா்களுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து, போலி நிறுவனங்கள் மற்றும் வாகனங்களுக்கான கடன் ரூ. 29.68 லட்சம் வழங்கியது தெரியவந்தது.
இதையடுத்து, அவா், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வங்கிக் கிளைகளில் வங்கி கடன்களைப் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வரும் ஒசூா் சந்தான பிரியா, ஸ்டேசன் சாலை வங்கி கிளை மேலாளா் ரங்கநாதன், ஒசூா் குமுதேபள்ளி சரத்குமாா், கோபால், கொல்லப்பட்டி வெங்கடேசன் உள்ளிட்டோா் மீது, வங்கி சாா்பில் அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.