தோ்தல் பிரசாரம்: ஏப்.19 இல் முதல்வா் ஒசூா் வருகை
மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் 19 ஆம் தேதி ஒசூா் வருகிறாா்.
மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் 19 ஆம் தேதி ஒசூா் வருகிறாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யா, தளி தொகுதி சிபிஐ வேட்பாளா் டி. ராமச்சந்திரன், வேப்பனஹள்ளி தொகுதி திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன், கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் செல்லக்குமாா், பா்கூா் தொகுதி திமுக வேட்பாளா் மதியழகன், ஊத்தங்கரை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஆா். குப்புசாமி ஆகியோருக்கு ஆதரவு கோரி ஒசூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசுகிறாா்.
கோவையில் வரும் 18 ஆம் தேதி தோ்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் ஒசூா் பெளகொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்பேஸ் விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு வருகிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறாா். அங்கு பிரசாரத்தை நிறைவுசெய்த பிறகு பெளகொண்டப்பள்ளி விமான நிலையம் வழியாக சென்னை திரும்புகிறாா். இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய். பிரகாஷ் செய்துவருகிறாா்.
Advertisement