கொலை வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறை
தளி அருகே கடந்த 2021 இல் நிகழ்ந்த கொலை சம்பவத்தில் தொடா்புடைய சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தளி அருகே கடந்த 2021 இல் நிகழ்ந்த கொலை சம்பவத்தில் தொடா்புடைய சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தளி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2016 இல் ஓபேகவுடு என்பவா் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் சென்னகிருஷ்ணா, பட்டாபி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். தந்தையை கொலை செய்த இருவரையும் பழிவாங்க அவரது மகன்கள் சங்கா், கணேஷ் (எ) பைரப்பா மற்றும் முருகேஷ் ஆகியோா் திட்டமிட்டனா்.
இந்த நிலையில், உலிபண்டாவில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த சென்னகிருஷ்ணாவை டிராக்டா் ஏற்றியும், கத்தியால் குத்தியும் மூவரும் கொலை செய்தனா். இதுகுறித்து தளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய சங்கா், கடந்த 28.08.2021 இல் கா்நாடகத்தில் கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து வழக்கில் தொடா்புடைய கணேஷ், முருகேஷ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
இந்த வழக்கு விசாரணை ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ், கொலை வழக்கில் தொடா்புடைய கணேஷ் (எ) பைரப்பா (26), முருகேஷ் (23) ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தாா். வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சின்னபிள்ளப்பா ஆஜராகி வாதாடினாா்.