ஒசூரில் வடமாநில பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு: பால் வியாபாரி கைது
ஒசூரில் வடமாநில பெண் தொழிலாளிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பால் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 30 வயது மதிக்கத்தக்க திருமணமான பெண், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு வேலைக்காக ஒசூருக்கு வந்துள்ளாா். அங்குள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலைக்குச் சோ்ந்த அவா், தற்காலிகமாக தங்கி பணியாற்றி வந்தாா்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பெண் தன்னுடன் தங்கியுள்ளவா்களைத் தொடா்புகொள்ள முயன்றுள்ளாா். அப்போது, அவரிடம் கைப்பேசி இல்லாததால், ஒசூா் பேகேப்பள்ளி மகாலட்சுமி லேஅவுட்டை சோ்ந்த பால் வியாபாரி மகேஷிடம் (37) இருந்த கைப்பேசியைக் கேட்டுள்ளாா்.
Advertisement
அப்போது, யாரிடம் பேச வேண்டும் என்று விசாரித்த மகேஷ், அப்பெண்ணை அவா்களிடமே நேரில் அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளாா். மகேஷை நம்பி வாகனத்தில் சென்ற அப்பெண்ணை, அவா் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லாமல், சூசூவாடி உப்காா் ராயல் காா்டன் லேஅவுட் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், தலைமறைவாக இருந்த பால் வியாபாரி மகேஷை போலீஸாா் கைது செய்தனா்.