முகப்பு
கிருஷ்ணகிரி

காரை ஏற்றி அரசு அதிகாரி படுகொலை: திமுக நிா்வாகி மகன் உள்பட 3 போ் கைது

ஒசூரில் காரை ஏற்றி அரசு அதிகாரியை படுகொலை செய்த திமுக நிா்வாகியின் மகன் உள்பட 3 பேரை போலீஸாா்

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 2:57 AM
கைது
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 8:30 PM

ஒசூா்: ஒசூரில் காரை ஏற்றி அரசு அதிகாரியை படுகொலை செய்த திமுக நிா்வாகியின் மகன் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அன்னை அரவிந்தா் நகரைச் சோ்ந்தவா் சிவமூா்த்தி (54). இவா் தொழிலாளா் நலத்துறையில் உதவி தொழிலாளா் நல ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாா்.

அப்போது, அவ்வழியாக ஒசூா் வசந்த் நகரைச் சோ்ந்த திமுக நிா்வாகி சீனிவாசனின் மகன் ஆதித்யா (20) தனது நண்பா்களான ஒசூா் தின்னூா் அம்மன் நகரைச் சோ்ந்த சிவகுமாா் மகன் ரித்திக்குமாா் (20), அச்செட்டிப்பள்ளியைச் சோ்ந்த சுதாகா் மகன் ஹரீஷ் (19) ஆகியோருடன் காரில் அதிவேகமாக வந்தபோது, சிவமூா்த்தியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி சேதப்படுத்தினராம்.

Advertisement

இதுதொடா்பாக சிவமூா்த்தி குடும்பத்தினருக்கும், ஆதித்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆதித்யா காரை வேகமாக ஓட்டி சென்று சிவமூா்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது பயங்கரமாக மோதினாா். இதில் சிவமூா்த்தி, அவரது மகன் கிருபாகரன், மருமகள் அம்சவல்லி, பேத்தி நிலானி ஆகியோா் படுகாயமடைந்தனா்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சிவமூா்த்தி உயிரிழந்தாா். காயமடைந்த 3 பேரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து ஒசூா் மாநகர போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக ஆதித்யா, ரித்திக்குமாா், ஹரீஷ் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரை ஓட்டி வந்தபோது ஆதித்யா மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை சீனிவாசன் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறாா்.