முகப்பு
கிருஷ்ணகிரி

தில்லியில் விவசாயிகள் மாநாடு: கிருஷ்ணகிரி விவசாயிகள் பங்கேற்பு

Updated On : 19 மார்ச், 2026 at 11:50 PM
பகிர்:

விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும், விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பொதுக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

இதுகுறித்து தமிழ விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராமகவுண்டா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அகில இந்திய விவசாயிகளின் தலைவா் ஜகதிஷ் சிங் தல்லேவால் தலைமையில், தில்லி ராம்லீலா மைதானத்தில் வியாழக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, விவசாயிகள் கன்னியாகுமரியிலிருந்து பாதையாத்திரை மேற்கொண்டு, 28 மாநில முதல்வா்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினா். இந்த பாதயாத்திரையில் தமிழக விவசாயிகள் சாா்பில், கா்நாடக மாநிலத் தலைவா் சாந்தகுமாா், தமிழக ஒருங்கிணைப்பாளா்கள் பி.ஆா்.பாண்டியன், ராமகவுண்டா், தேசிய தலைவா் அபிமன்யு ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த சூழ்நிலையில், தில்லியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ராமகவுண்டா், மாநில ஆலோசகா் கண்ணையா ஆகியோா் முன்னிலையில் விவசாயிகள் பங்கேற்றனா்.

இந்த கூட்டத்தில், உலகில் பெரும்பாலான நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்பட்ட போதிலும், இந்திய விவசாயிகள் அபரிமிதமாக உணவு உற்பத்தி செய்து குறைவான விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். எனவே, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.