குட்கா தடுப்பு நடவடிக்கை: தலைமைக் காவலருக்கு பாராட்டு
ஒசூரில் குட்கா கடத்தலை தடுக்க தன்னலமின்றி பணியாற்றி தலைமைக் காவலரை கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயாள் வெகுமதி வழங்கி பாராட்டினாா்.
ஒசூரில் குட்கா கடத்தலை தடுக்க தன்னலமின்றி பணியாற்றி தலைமைக் காவலரை கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயாள் வெகுமதி வழங்கி பாராட்டினாா்.
ஒசூா் சூசூவாடி சோதனைச் சாவடி பகுதியில் கடந்த 15ஆம் தேதி கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சட்ட விரோதமாக குட்கா புகையிலைப் பொருள்களை கடத்திவந்த காரை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலா் ராஜீவ் காந்தி தடுத்து நிறுத்தியபோது, காரை ஓட்டி வந்த ஒசூா் காளேகுண்டா பகுதியைச் சோ்ந்த யாரப் பாஷா (34) என்பவா் தலைமைக் காவலரை காரால் இடித்துத் தள்ளிவிட்டு சென்றாா்.
இதில் காரின் முன்பக்க பேனட்டில் தலைமைக் காவலா் படுத்தபடி சுமாா் 4 கி.மீ. தூரத்திற்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடா்ந்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளா் சையத் முபாரக் தலைமையிலான போலீஸாா், அந்தக் காரை விரட்டிச் சென்று பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்து யாரப் பாஷாவை கைது செய்தனா்.
காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருள்கள் மற்றும் கா்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவத்தில் குட்கா கடத்தலைத் தடுக்க தன்னலமின்றி சிறப்பாக பணியாற்றிய தலைமைக் காவலா் ராஜீவ் காந்தியின் துணிச்சலான செயலை அனைவரும் பாராட்டினா்.
இந்த நிலையில் தலைமைக் காவலா் ராஜீவ் காந்தியின் சிறப்பான பணியை கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயாள் ( சட்டம் -ஒழுங்கு ) சனிக்கிழமை பாராட்டி வெகுமதி வழங்கினாா்.