தகுதி, திறமையை வளர்த்துக்கொண்டால், மாணவர்கள் வாழ்வில் முன்னேறலாம் என்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தெரிவித்தார்.
ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா, காவலர் வீரவணக்க நாள் போட்டி ஆகியன அண்மையில் நடைபெற்றன. இதில், விநாடி வினா, பேச்சுப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, அர.அருளரசு பேசியது:-
நீங்கள் என்னவாக வேண்டும் எனநினைக்கிறீர்களோ, அதற்கேற்றவாறு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் இலக்கை அடைய முடியும்.
ஒரு மாணவர் கல்வியால் 20 சதவீதமும், சமுதாயத்தில் 80 சதவீதமும் அனுபவத்தை கற்றுக் கொள்ள முடியும் என்றார்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மு.ஆ.உதயகுமார் தலைமை வகித்தார். டிஎஸ்பி., ஆர்.விஜயராகவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.