நாமகிரிப்பேட்டை கூட்டுறவு ஏல மையத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான மஞ்சள் வர்த்தகம் நடந்தது.
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறும்.
இதில் சுற்று வட்டார பகுதி மஞ்சள் விவசாயிகள், வியாபாரிகள் விரலி, உருண்டை, பனங்காளி ரக மஞ்சள் ஏலத்தில் கொண்டு வந்து பங்கேற்பர். இந்த வாரம் நடந்த ஏலத்தில் விரலி ரகம் 160 மூட்டை, உருண்டை ரகம் 90 மூட்டை, பனங்காலி ரகம் 2 மூட்டை என 252 மூட்டைகள் ஏலத்துக்குக் கொண்டுவரப்பட்டன.
இதில் விரலி ரகம் குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரத்து 702-க்கும், அதிக பட்சமாக ரூ.7 ஆயிரத்து 579-க்கும் விற்பனையானது. உருண்டை ரகம் ரூ.6 ஆயிரத்து 9 முதல் அதிக பட்சமாக 6 ஆயிரத்து 992-க்கும் தரத்திற்கேற்றவாறு விற்பனையானது.
பனங்காலி ரகம் குறைந்தபட்சமாக ரூ. 9 ஆயிரத்து 712-க்கும், அதிக பட்சமாக ரூ. 10 ஆயிரத்து 212-க்கும் விற்பனையானது. இதில் மொத்தம் ரூ. 12 லட்சத்துக்கு வர்ததகம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்று ஏலம்
எடுத்தனர்.