நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் கம்பர் விருது வழங்கும் விழா மற்றும் பட்டிமன்றம் வரும் 29, 30-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
நாமக்கல் கம்பன் கழகம் சார்பில் கம்பன் விழா நாமக்கல் நளா ஹோட்டலில் வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு தொடங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ. குழந்தைவேல் பங்கேற்று பேசுகிறார். கம்பனில் பண்பாடுகள் என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்றுப் பேசுகிறார்.
இதில் கம்பர் விருது இலங்கை ஜெயராஜ்க்கும், கம்பர் மாமணி விருது காரைக்குடி, நாட்டரசன்கோட்டை கம்பன் கழகங்களின் செயலர் பழ. பழனியப்பனுக்கும் வழங்கப்படுகிறது.
விழாவில் துறைசார் வல்லுநர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
மனிதநேய மருத்துவர் விருது மருத்துவர் ஆர். குழந்தைவேல், சமூக ஆர்வலர் விருது ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் என்.சிவப்பிரகாசம், வேளாண் வித்தகர் விருது இயற்கை வேளாண் பண்ணை எம்.கே.சேதுராமன், நல்லாசிரியர் விருது அழகு நகர் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் வி. விஜயலட்சுமி, அயலகத் தமிழர் விருது சிங்கப்பூர் மதி, இளைய விடிவெள்ளி விருது ஓ.செüதாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ். ரஞ்சித் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து கம்பன் விழா பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
30- ஆம் தேதி மாலை 5 மணிக்குத் தொடங்கும் 2ஆம் நாள் நிகழ்வில், இலங்கை ஜெயராஜ் நடுவராக பங்கேற்கும் கம்ப காவியத்தில் நம்மை பெரிதும் ஈர்ப்பது அன்பின் வலிமையா? அறத்தின் பெருமையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.
அன்பின் வலிமையே என்ற அணியில் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, முனைவர் மு. பழனியப்பன், குருநானாம்பிகை ஆகியோர் பேசுகின்றனர். அறத்தின் பெருமையே என்ற அணியில் த.ராமலிங்கம், முனைவர் க.முருகேசன், முனைவர் விஜயசுந்தரி ஆகியோர் பேசுகின்றனர். விழா ஏற்பாடுகளை, நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வ. சத்தியமூர்த்தி, செயலர் அரசு பரமேஸ்வரன், அமைப்பாளர் மா. தில்லை சிவக்குமார் ஆகியோர் செய்துள்ளனர்.