பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள நஞ்சப்பகவுண்டம்பாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் அகில இந்திய அளவில் நடைபெறும் ஜூனியர் ரெட்கிராஸ் பயிற்சி முகாமுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
அகில இந்திய அளவிலான ஜூனியர் ரெட்கிராஸ் பயிற்சி முகாம் ஒடிசா மாநிலம், புரியில் வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷாவின் வழிகாட்டுதலின் படி, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இருபது மாணவ, மாணவிகளும் நான்கு ஆசிரிய, ஆசிரியைகளும் இப் பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள நஞ்சப்பகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் கோபிகா, தீபா, பானுமதி ஆகிய மூன்று மாணவிகளும், ஆசிரியை லதா மற்றும் நாமக்கல் மாவட்ட ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பாளர் ஊமத்துரை ஆகியோரை வழியனுப்பும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பூபதி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்குத் தேவையான சீருடைகள் மற்றும் நிதி உதவியை பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுத் தலைவர் ஜோதிலிங்கம் வழங்கினார்.