நாமக்கல் நகரப் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1 டன் அளவு நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை இருப்பு வைத்திருந்த வணிகர்களுக்கு ரூ.14,000 அபராதம் விதிக்கப்பட்டது.
14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், நாமக்கல் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்ள்கள் பயன்படுத்தப்படுகின்றனவா? என நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நகராட்சி ஆணையர்(பொறுப்பு) கமலநாதன் தலைமையில் நடந்த இந்த ஆய்வில் சுமார் 1 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை வைத்திருந்த வணிகர்களுக்கு அதிகாரிகள் ரூ.14,000 அபராதம் விதித்தனர்.
இந்த ஆய்வில் நகராட்சி துப்புரவு அலுவலர் பேச்சிமுத்து, துப்புரவு ஆய்வாளர் உதயகுமார் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டனர்.