பரமத்தி வேலூர் வட்டத்தில் அறுவடை செய்த மரவள்ளிக்கிழங்கின் விலை டன்னுக்கு ரூ.750 வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளதால் மரவள்ளிப் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் வட்டத்தில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் (மாவு) தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச் சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.5, 750 - க்கு விற்பனையானது. தற்போது டன் ரூ.750 வரை விலை உயர்ந்து, ரூ. 6, 500 வரை விற்பனையாகி வருகிறது. மரவள்ளிக்கிழங்கின் விலைத் தொடர்ந்து உயர்வடைந்து வருவதால் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.