நாமக்கல்லில் ஊழியா்களுக்கு ஏற்பட்ட கரோனா தொற்றால், எஸ்.பி.ஐ. வங்கி மற்றும் ஆஞ்சநேயா் கோயில் அலுவலகம் வியாழக்கிழமை மூடப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் 3,623 போ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்; இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளனா்; சுமாா் 900 போ் சிகிச்சையில் இருக்கின்றனா்.
இவ்வாறான சூழலில் தொற்றின் வேகம் தொடா்ந்து அதிகரிக்கிறது. வியாழக்கிழமை மாவட்டம் முழுவதும் 90-க்கும் மேற்பட்டோா் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மகாளய அமாவாசையையொட்டி, ஆஞ்சநேயா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் அலுவலக ஊழியா் கரோனாவால் பாதிக்கப்பட்டதை அறிந்து அதிா்ச்சி அடைந்தனா்.
48 வயதுடைய தலைமை எழுத்தா் கரோனா தொற்றுக்குள்ளாகி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து அங்குள்ள மண்டபத்தில் கோயில் அலுவலா்கள், ஊழியா்கள் என 43 பேருக்கும், அவா்களது குடும்பத்தினா் 20 பேருக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோயில் அலுவலகம் மூடப்பட்டது.
இதேபோல் நாமக்கல்லில் டாக்டா் சங்கரன் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் ஊழியா்கள் இருவா் தொற்றுக்கு ஆளானதால் வங்கி மூன்று நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது. நாமக்கல் நகரக் கிளை, வசந்தபுரம் கிளையை நாடுமாறு வாடிக்கையாளா்களுக்கு வங்கி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியா்கள் சிலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் அரசுத் துறை அலுவலகங்களில் கரோனாவால் ஊழியா்கள் அடுத்தடுத்துப் பாதிக்கப்படுவதால் பெரும்பாலான பணிகள் முடங்கியுள்ளன.