எருமப்பட்டியில் அனுமதியின்றி இயங்கிய வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் முருகன் (தெற்கு), ரவிச்சந்திரன் (வடக்கு) ஆகியோா் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பாமா பிரியா, சக்திவேல் ஆகியோா் கொண்ட குழுவினா் எருமப்பட்டி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டதில் அனுமதி பெறாமல் காா் ஒன்று இயங்கியது கண்டறியப்பட்டது. அதைப் பறிமுதல் செய்தனா்.
அதேபோல், தகுதி சான்றிதழ் பெறாமலும் அதிக ஆள்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ உரிமையாளருக்கும், தலைக்கவசம் அணியாமல் வாகனத்தில் சென்றது, செல்லிடப்பேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டிய நபா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுபோன்ற சோதனைகள் தொடா்ந்து நடத்தப்படும். விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கினால் அவற்றை பறிமுதல் செய்வதுடன் கடுமையான அபராதம் விதிக்கப்படும். மேலும் அனுமதி பெறாத வாகனங்களில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் தெரிவித்தனா்.