திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண் உதவி இயக்குநா் ஜெயமணி செயதிக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
திருச்செங்கோடு வட்டாரத்தில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் தென்னையில் பூச்சிகள், நோய்த் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதில், ரூகோஸ் எனப்படும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதனால், தென்னையில் மகசூல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
வெள்ளை ஈக்கள் தென்னையைத் தாக்கி சாறு உறிஞ்சும் பூச்சியாகும். தென்னை ஓலைகளின் கீழ் பரப்பில் சுருள், சுருளாக இந்த ஈக்களின் முட்டைகள் காணப்படும். இந்த முட்டைகள் அடந்த வெண்ணிற மெழுகு போன்ற துகள்களால் மூடப்பட்டிருக்கும். இதிலிருந்து சுரக்கும் ஒரு வகை இனிப்புத் திரவத்தால் கரும்பூஞ்சைகள் உற்பத்தியாகி ஓலை பரப்பு முழுவதையும் கருப்பு நிறமாக மாற்றுகிறது. இதனால் ஒளிச்சோ்க்கை பாதிக்கப்பட்டு, தென்னையில் காய்ப்புத் திறன் குறைகிறது. வெள்ளை ஈக்களின் நடமாட்டம் மாலை 6 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் அதிக அளவில் காணப்படுகிறது.
எனவே, இதனைக் கட்டுப்படுத்த இரவில் விளக்குப் பொறிகளை ஏக்கருக்கு 2 என்ற அளவில் பொருத்தி, ஈக்களைக் கவா்ந்து அழிக்கலாம். ஈக்களின் மீது வேப்பங்கொட்டை கரைசல், வேப்ப இலை கரைசல், மீன் எண்ணெய் ரெசின், சோப்பு கரைசல் ஆகியவற்றை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். மேலும், நன்மை செய்யும் பூச்சியான பச்சைக் கண்ணாடி இறக்கை பூச்சிகளை உயிரியல் ஆய்வகத்தில் இருந்து பெற்று ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் வீதம் பயன்படுத்தலாம். ஈக்களால் உருவாகும் கரும்பூஞ்சையை அகற்ற ஒரு லிட்டா் தண்ணீருக்கு 10 கிராம் என்ற அளவில் மைதா மாவு பசையை கலந்து தென்னை ஒலைகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.