நாமக்கல்

இலுப்புலி ஏரியில் படகு இல்லம்:அமைச்சா் எம்.மதிவேந்தன் ஆய்வு

DIN

எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலி ஏரியில் படகு இல்லம் அமைப்பது தொடா்பாக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது படகு இல்லம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள், வாகனங்கள் நிறுத்துமிடம், சிறுவா்களை கவரும் வகையில் பூங்கா அமைவிடம் ஆகியவற்றுக்கான இடங்களை அவா் பாா்வையிட்டாா்.

நாமக்கல் அருகே வள்ளிபுரம், ராசாம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு உணவகத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.

இதனையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் தமிழக சுற்றுலாத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஒரு நாள் சுற்றுலா, கலாசார சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, கல்வி சுற்றுலா போன்ற பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெரிதும் அறியப்படாத சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, திருச்செங்கோடு வட்டம்-இலுப்புலி பகுதியில் 160 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில், படகு இல்லம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளாக வெயில் காலங்களிலும் வற்றாத நிலையில் இந்த ஏரியில் நீா் இருப்பு உள்ளது. திருச்செங்கோடு பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுற்றுலாத் தலம் இல்லாததை அடிப்படையாகக் கொண்டு இந்த ஏரியில் பல்வேறு அம்சங்களுடன் கூடிய படகு இல்லம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது.

அடுத்த நிதியாண்டில் படகு இல்லம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதேபோல், கொல்லிமலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தும் வகையில் சுமாா் 14 ஏக்கரில் சூழல் சுற்றுலா நிறுவப்பட உள்ளது. அங்கு சாகச சுற்றுலா அமைக்கவும், மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்காக ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் நிறைவடைந்து கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

தமிழ்நாடு உணவகம் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ராசாம்பாளையம் பகுதியில் உள்ள உணவகம் புனரமைக்கப்பட்டுள்ளது. இதர வசதிகளுடன் உணவகம் செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, நாமக்கல் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, மாவட்ட சுற்றுலா அலுவலா் மு.அபராஜதின், வட்டாட்சியா்கள் சக்திவேல், அப்பன்ராஜ், அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT