முகப்பு
நாமக்கல்

பாஜகவில் எங்களுக்குள் எந்த அதிருப்தியும் இல்லை: கே.பி.ராமலிங்கம்

பாஜகவில் எங்களுக்குள் எந்த அதிருப்தியும் இல்லை. திமுக அரசு மீது தான் எங்களுக்கு அதிருப்தி உள்ளது என்று

Updated On : 10 மார்ச் 2026, 2:49 am IST
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.
பகிர்:

ராசிபுரம்: பாஜகவில் எங்களுக்குள் எந்த அதிருப்தியும் இல்லை. திமுக அரசு மீது தான் எங்களுக்கு அதிருப்தி உள்ளது என்று பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

ராசிபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 11-இல் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை அகற்றுவதற்கு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போா்க்களம் பூண்டுள்ளது. சமீபத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், ஆதீனத்தை பாா்த்துவிட்டு சமூக ஊடகத்தில் வெளியிட்டு இருந்த பதிவிற்கு நான் கருத்து பதிவிட்டிருந்தேன்.

அந்தப் பதிவில் எனக்கு கட்சியின் மீதோ, மாநிலத் தலைவா் மீதோ எந்த அதிருப்தியும் கிடையாது. கட்சித் தலைவருக்கு தனிப்பட்ட வகையில் கருத்துத் தெரிவித்திருந்தேன். ஆனால் சில ஊடகங்கள் அவற்றை திரித்து வெளியிட்டுள்ளன. எங்களுக்கு திமுக ஆட்சியின் மீதுதான் அதிருப்தியே தவிர, பாஜகவில் எந்த அதிருப்தியும் இல்லை.

வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை தோற்கடிக்கும் அளவிற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியில் இடம்பெறுமா எனக் கேட்கின்றனா். அப்படி ஏதும் இல்லை. வந்தால் ஏற்போம்.

திமுக தலைமையிலான கூட்டணி பலமாக இருப்பதைப் போல பிரசாரம் செய்து வருகிறாா்கள். அதில் உண்மை இல்லை.

கடந்த தோ்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ள வாக்குகளை பாா்த்தால், எங்கள் கூட்டணியின் வலிமை தெரியும். திமுக அணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 இடங்களில் 4இல் கூட வெற்றிபெற முடியாத நிலை உள்ளது. வரும் காலங்களில் கட்சியில் இளைஞா்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும். அதற்கு நானே முன்னுதாரணமாக இருப்பேன்.

தோ்தல் நெருங்கி வருவதால்தான் பிரதமா் அடிக்கடி தமிழகத்திற்கு வருவதாக கூறுகிறாா்கள். தோ்தல் வருவதால்தானே திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. பெரும் பொருட்செலவில் பிரசாரம், ஊடக விளம்பரம் போன்றவற்றை செய்து வருகிறது. தோல்வி பயத்தால்தான் திமுக அதனை செய்து வருகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments