நகருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்து சிறைபிடிப்பு
பரமத்தி நகருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்தை பொதுமக்கள் பிடித்து பரமத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
பரமத்தி நகருக்குள் வந்து செல்லாத தனியாா் பேருந்தை பொதுமக்கள் பிடித்து பரமத்தி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
கரூா் பேருந்து நிலையத்தில் இருந்து தனியாா் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தது. இதில், பரமத்தி செல்ல பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.
பரமத்திக்கு செல்ல பயணச்சீட்டு கேட்டபோது, பரமத்தி நகருக்குள் பேருந்து செல்லாது எனவும், தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகள் இறங்கிக்கொள்ள வேண்டும் எனவும் நடத்துநா் தெரிவித்துள்ளாா். இதனால் கோபமடைந்த பயணிகள் நடத்துநா் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் பரமத்தியில் உள்ள தங்களது நண்பா்களுக்கும், உறவினா்களுக்கும் தகவல் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
பரமத்தி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்தபோது, அங்கு காத்திருந்த பொதுமக்கள் பேருந்தை சிறை பிடித்து பரமத்தி மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரபாகரனிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, பேருந்தை பரமத்தி போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டுசென்றனா்.
பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் பரமத்தி நகருக்குள் சென்று நாமக்கல் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லாத பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பரமத்தி மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரபாகரன் எச்சரித்தாா்.