சேலத்தில் வயதான பெண்ணிடம் நகையைப் பறித்து சென்ற நபரை பொதுமக்கள் துரத்திச் சென்று பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி மத்திய சிறை அருகே உள்ள திருநகர் பகுதியில் திங்கள்கிழமை காலை 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு ஆணும், பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திடீரென நடந்து சென்று கொண்டிருந்த பெண் அருகே இருசக்கர வாகனம் சென்றது.
பின்னர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதனிடையே நகையைப் பறிகொடுத்த பெண் கூச்சலிட்டதால் அருகில் உள்ளவர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களைத் துரத்திச் சென்றனர். சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்திச் சென்ற அவர்கள், ராமகிருஷ்ணா சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை மடக்கிப் பிடித்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருந்த பெண் அங்கிருந்து ஆட்டோவில் ஏறி தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட நபரை பொதுமக்கள் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் நகையைப் பறித்தது ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பது தெரியவந்தது. இவர் மீது நகைப் பறிப்பு தொடர்பான பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது.
அவருடன் வந்த பெண் யார், அவர் எங்கு தப்பி ஓடினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.