ஆத்தூர் தேசிய புறவழிச்சாலையில் கார் மீது மோதியதில் மீன் ஏற்றி வந்த லாரி சாலையோரத்தில் வெள்ளிக்கிழமை கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு மீன் ஏற்றிச் சென்ற லாரியை பாலமுருகன் (40) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருக்கு துணையாக ஓட்டுநர் மணிகண்டன் (25) என்பவரும் உடன் வந்துள்ளார்.
அதேபோல புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் பிரமோத் (47) என்பவர் கேரள மாநிலம் சென்று விட்டு காரில் புதுச்சேரிக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
காரில் அவரது தாய் தேவி (70), மனைவி ஸ்ரீநா (40),மகன்கள் ஆதர்ஷ் (17), அஸ்வின் (13) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர்.
ஆத்தூர் தேசிய புறவழிச்சாலையில் சென்ற போது எதிரே வந்த மீன் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியதில் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் லாரி ஓட்டுநர் மணிகண்டன், பாலமுருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதே போல காரில் சென்ற அனைவரும் லேசான காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் டி.மூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கோரிக்கை: ஆத்தூர் தேசிய புறவழிச்சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவு நான்கு மேம்பாலங்களுடன் இருவழிச்சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தபட்ட துறை அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.