சிறப்பு மனுநீதி திட்ட முகாம்
சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட இருகாலூர் புதுப்பாளையத்தில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட இருகாலூர் புதுப்பாளையத்தில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு சேலம் கலால் உதவி ஆணையர் ஆர்.கார்த்திக்கேயன் தலைமை வகித்து, அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கிப் பேசினார். பின்னர், 20 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத் திறனாளி ஒருவருக்கு உதவிதொகைக்கான உத்தரவை வழங்கினார். வட்டாட்சியர் கே.அருள்குமார் வரவேற்றார்.
வட்டாட்சியர்கள் (சமூக நலத்துறை) செம்மலை, ஆதிதிராவிடர் நலத்துறை பாலகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலர் கோவிந்தராஜ், மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், சங்ககிரி கிழக்கு வருவாய் ஆய்வாளர் எஸ்.ராஜாராமன், கிராம நிர்வாக அலுவலர் ராசாத்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் முதியோர் உதவித்தொகை, பிறப்பு சான்றிதழ், குடிநீர், சாலை வசதி கோரி பொதுமக்கள் தரப்பில் 18 மனுக்கள் கலால் உதவி ஆணையரிடம் வழங்கப்பட்டன.
ஏற்காட்டில்... ஏற்காடு செம்மநத்தம் ஊராட்சி கடுகாமரத்தூர் கிராமத்தில் மனுநீதி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு வட்டாட்சியர் ஜி.சுமதி தலைமை வகித்தார். சமூக நலப் பாதுகாப்பு வட்டாட்சியர் சண்முகவள்ளி, மண்டல துணை வட்டாட்சியர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மலைவாழ் மக்களிடமிருந்து ஏழு மனுக்கள் பெறப்பட்டன.
சாலை வசதி, முதியோர் உதவித் தொகை, குடிநீரில் கழிவுநீர்க் கலப்பதைத் தடுத்து புதிய கால்வாய் அமைப்பது தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.